மஞ்சூர், ஜூலை 28: மஞ்சூர் குந்தாபாலம் அருகே கொண்டை ஊசி வளைவில் விபத்துகளை தவிர்க்க தடுப்பு அமைக்க வேண்டும் என வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ளது குந்தாபாலம். மஞ்சூரில் இருந்து ஊட்டி மற்றும் குன்னுார், எடக்காடு போன்ற பகுதிகளுக்கு செல்லும் பிரதான சாலையாக உள்ளதால் அரசு பஸ்கள், தனியார் வாகனங்களின் போக்குவரத்து அதிகமாக காணப்படும். குறுகிய கொண்டை ஊசி வளைவுகள் அதிகமுள்ளதுடன் சாலையின் ஒரு பகுதியில் பள்ளங்கள் அமைந்துள்ளன. விபத்துகளை தடுக்கும் வகையில் சாலையோரங்களில் நெடுஞ்சாலைதுறை சார்பில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
பல இடங்களில் அமைக்கப்பட்டுள்ள இரும்பு தடுப்புகள் உடைந்தும் காணாமலும் போயுள்ளது. குறிப்பாக, குந்தாபாலம் குடிநீர் தொட்டி அருகே கொண்டை ஊசி வளைவில் சாலையோரத்தில் தடுப்பு இல்லாமல் உள்ளது. இதனால், விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, விபத்துகளை தவிர்க்க இப்பகுதியில் இரும்பு தடுப்பு அமைக்க வேண்டும் என வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.